தில்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெறும் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை சந்திக்கிறது தென் ஆப்பிரிக்கா..
உலகக் கோப்பையை இதுவரை வென்றதில்லை, இறுதிப் போட்டிக்கும் இதுவரை முன்னேறியதில்லை என்றாலும், இந்த முறை கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது துரதிர்ஷ்டக்கார அணியான தென் ஆப்பிரிக்கா. 1992, 1999, 2007 ஆகிய ஆண்டுகளில் அரையிறுதி வரை முன்னேறியுள்ளது.
இந்த முறை முதல் ஆட்டத்தை வெற்றியோடு தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு களமிறங்குகிறது கிரீம் ஸ்மித் தலைமையிலான இளம் அணி. அந்த அணியின் அதிரடி ஆல்ரவுண்டரான காலிஸ் காயத்திலிருந்து மீண்டு அணிக்கு திரும்பியுள்ளது கூடுதல் பலம்.
கிரீம் ஸ்மித், ஹசிம் ஆம்லா, ஏ.பி.டிவில்லியர்ஸ், ஜே.பி.டுமினி என மிகச்சிறந்த பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. இவர்கள் எதிரணி பந்து வீச்சாளர்களை பந்தாடும் அசாத்திய திறமை பெற்ற பேட்ஸ்மேன்கள் என்றே சொல்லலாம்.
பந்துவீச்சைப் பொறுத்தவரையில் டேல் ஸ்டெயின், மோர்ன் மோர்கல், வேய்ன் பர்னல் என சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களையும், ஜோஹன் போத்தா, ராபின் பீட்டர்சன் உள்ளிட்ட சுழற்பந்து வீச்சாளர்களையும் கொண்டுள்ளது.
அதேசமயம் எதிரணியான மேற்கிந்தியத் தீவுகள் அணி எப்படி ஆடும் என்று அவ்வளவு எளிதில் கணித்துவிட முடியாது. இளம் வீரர்களுடன் களமிறங்கும் அந்த அணி, கிறிஸ் கெயில், சிவநாராயண் சந்தர்பால், ராம்நரேஷ் சர்வான் ஆகியோரையே பேட்டிங்கில் நம்பியுள்ளது.
கைரன் பொல்லார்டு, கெமர் ரோச், டேரன் பிராவோ, டுவைன் பிராவோ ஆகியோர் அதிரடியாக விளையாடி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடியவர்கள். இவர்கள் சிறப்பாக ஆடும் பட்சத்தில் மேற்கிந்தியத் தீவுகள் பெரிய அளவில் ரன் குவிக்க முடியும்.
மேற்கிந்தியத் தீவுகளின் பொல்லார்டு, பிராவோ, கிறிஸ் கெயில் போன்ற வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியவர்கள். அவர்கள் இந்திய ஆடுகளங்களைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் என்பதால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மழை ஆபத்து: தில்லியில் வியாழக்கிழமை மழை பெய்யக்கூடும் என தில்லி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை பெய்யாத பட்சத்தில் இந்த ஆட்டம் தில்லி ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக அமையும்.
சிறப்பாக விளையாடுவோம்- காலிஸ்: முதல் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடுவோம் என்று தென் ஆப்பிரிக்காவின் மூத்த ஆல்ரவுண்டர் காலிஸ் தெரிவித்துள்ளார்.தென் ஆப்பிரிக்க அணியில் இப்போதுள்ள 15 வீரர்களில் 11 பேர் உலகக் கோப்பையில் விளையாடியதில்லை. ஆனாலும் அது பற்றி கவலையில்லை. சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே எங்களின் குறிக்கோள். எல்லா வீரர்களும் நல்ல பார்மில் உள்ளனர். சமீப காலங்களில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா சிறப்பாகவே விளையாடி வந்துள்ளது. இரு அணிகளும் சமபலம் வாய்ந்த அணிகள் என்றார்
வெற்றியோடு தொடங்க விரும்புகிறோம்-கிறிஸ் கெயில்: முதல் ஆட்டத்தை வெற்றியோடு தொடங்க விரும்புவதாக மேற்கிந்தியத் தீவுகள் தொடக்க வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.
பெரோஸ் ஷா கோட்லா மைதானம்
இங்கு ஒருநாள் ஆட்டம் கடைசியாக 2009 டிசம்பரில் நடைபெற்றது. இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான இந்த ஆட்டத்தின் போது முதலில் பேட் செய்த இலங்கை வீரர்கள் இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் காயமடைந்தனர். மோசமான பராமரிப்பே பந்துகள் எகிறியதற்கு காரணம் என தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆட்டம் கைவிடப்பட்டது. பெரோஸ் ஷா கோட்லா மைதானத்துக்கு ஓராண்டு தடை விதித்தது ஐசிசி. பின்னர் ஐ.சி.சி.யின் ஆய்வுக்குப் பிறகு மைதானத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

0 comments to "தென் ஆப்பிரிக்காவுடன் மேற்கிந்தியத் தீவுகள் இன்று மோதல்"